ஷா ஆலம், ஜூன் 15: நேற்று காலை தஞ்சோங் சிப்பாட், ஜாலான் பந்தாய் மோரிப்பில், பலத்த மழை மற்றும் புயலால் தஞ்சோங் சிப்பாட், பந்திஙை நோக்கி செல்லும் பந்தாய் மோரிப்பில் சாலையில் சென்று கொண்டிருந்த லாரியின் மீது மரம் விழுந்தது. அந்நேரம் லாரி ஓட்டுனர் ஒரு கணம் பதற்றத்தை உணர்ந்துள்ளார்.
30 வயதுடைய அந்த லாரி ஓட்டுனருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என சிலாங்கூர் தீயணைப்புத்துறை இயக்குநர், வான் எம்.டி. ரசாலி வான் இஸ்மாயில் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக காலை 6.47 மணி அளவில் தனது தரப்புக்கு அவசர அழைப்பு வந்ததாக அவர் கூறினார்.
“சுமார் 10 மரங்கள் விழுந்து வாகனங்களின் பாதையைத் தடுத்தன. மேலும், அச்சாலை வழியாகச் சென்ற 10 டன் லாரி ஒன்று, மரக்கிளையில் மோதியது. லாரி ஓட்டுநர் தன்னை காப்பாற்றிக் கொள்ள லாரியை விட்டு இறங்கியுள்ளார்.
இதுகுறித்து இஸ்மாயில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாதையை அடைத்துள்ள மரங்களை அகற்றும் பணியை தீயணைப்புத் துறையினர் நான்கு மணி நேரம் மேற்கொண்டனர்`` என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரங்களை அகற்றுவதற்கு மலேசியக் குடிமைத் தற்காப்புத் துறை, கோலா லங்காட் நகராண்மை கழகம், பொதுப்பணித் துறை மற்றும் ராயல் மலேசியன் காவல்துறையும் உதவியதாக அவர் கூறினார்.
– பெர்னாமா








