ஷா ஆலம், ஜூன் 15- கடந்தாண்டு எஸ்.பி.எம். தேர்வில் குறிப்பிட்ட சில
மாணவர்கள் அமராததற்கான காரணத்தைக் கண்டறிய கல்வியமைச்சு
விரிவான ஆய்வினை மேற்கொள்ளவுள்ளது.
இந்த ஆய்வின் முடிவுகள் பகிரப்படும் அதே வேளையில் வரும்
காலங்களில் நடைபெறும் எஸ்.பி.எம். தேர்வுகளில் இது போன்ற
பிரச்சனைகள் எழாமலிருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளும்
எடுக்கப்படும் என்று கல்வியமைச்சர் ஃபாட்லினா சீடேக் கூறினார்.
இது ஒரு நீண்ட காலப் பிரச்சனையாகும். இம்முறைதான் நாம்
மாணவர்கள் தேர்வில் அமர்வதை உறுதி செய்வதற்கான
நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்கு இஸ்லாம் மற்றும் மலாய் எனும் தலைப்பிலான மாநாட்டை
தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத்
தெரிவித்தார்.
கடந்த 2022ஆம் ஆண்டில் எஸ்.பி.எம். தேர்வு எழுதுவதற்குத் தகுதி பெற்ற
388,832 மாணவர்களில் 14,858 பேர் அல்லது 3.8 விழுக்காட்டினர் அத்தேர்வை
எழுதவில்லை என்று ஃபாட்லினா கடந்த 11ஆம் தேதி கூறியிருந்தார்.
கடந்த 2021ஆம் ஆண்டைக் காட்டிலும் கடந்தாண்டு இத்தேர்வை எழுதாத
மாணவர்களின் எண்ணிக்கை உயர்வு கண்டுள்ளதை ஆய்வுகள்
காட்டுகின்றன. 2021ஆம் ஆண்டில் பதிவு பெற்ற 392,837 எஸ்.பி.எம்.
மாணவர்களில் 10,681 பேர் தேர்வில் அமரவில்லை.








