ஜோர்ஜ் டவுன், ஜூன் 13- மலேசியக் கடல் பகுதியில் எட்டு
பணியாளர்களுடன் நுழைந்த இந்தோனேசியாவின் இரு மீன்பிடி
படகுகளை மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் தடுத்து
வைத்துள்ளது.
நேற்று காலை 10.13 மணியளவில் புலாவ் கெண்டியின் தென்மேற்கே 28
மற்றும் 30வது கடல் மைல் பகுதியில் அவ்விரு படகுகளும் தடுத்து
வைக்கப்பட்டதாகக் கடல்சார் அமலாக்க நிறுவனத்தின் இயக்குநர் கேப்டன்
அப்துல் ரசாக் முகமது கூறினார்.
இந்தோனேசியாவைச் சேர்ந்த படகின் கேப்டன் உள்பட நால்வர் பயணித்த
முதலாவது படகில் 400 கிலோ எடையுள்ள மீன் உள்ளிட்ட பல்வேறு கடல்
உணவுகள் இருந்ததாக அவர் சொன்னார்.
கேப்டன் உள்பட நால்வருடன் பயணித்த இரண்டாவது படகில் 100 கிலோ
கடல் உணவுகள் இருந்தன. 13 முதல் 20 வயது வரையிலான அனைவரும்
செல்லத்தக்க ஆவணங்களைக் கொண்டிருக்கவில்லை என்று அவர்
அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் 1985ஆம் ஆண்டு மீன்பிடிச் சட்டத்தின் 15(1)(ஏ)
பிரிவு மற்றும் 1959/63ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டத்தின் 6(1)(சி) பிரிவின்
கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.








