கோல திரங்கானு, ஜூன் 13- இருபது லட்சம் அம்னோ உறுப்பினர்கள்
கட்சியை விட்டு விலகி விட்டதாக டான்ஸ்ரீ அனுவார் மூசா கூறியதை
அம்னோவின் துணைத் தலைவர் டத்தோ முகமது ஹசான் மறுத்துள்ளார்.
விமர்சனங்களைச் செய்வதற்கு உரிமை இருந்த போதிலும் அம்னோவைப்
பற்றி அறிக்கை விடுவதில் கவனமுடன் இருக்கும்படி அக்கட்சியின்
முன்னாள் தகவல் பிரிவுத் தலைவரான அனுவார் மூசாவுக்கு ஹசான்
நினைவுறுத்தினார்.
அந்த எண்ணிக்கை அவருக்கு எங்கிருந்து கிடைத்தது என்று
தெரியவில்லை. அம்னோவில் 20 லட்சம் பேர் இணைந்துள்ளனர் என்று
நானும் கூற முடியும். மக்கள் சிந்தித்து முடிவெடுக்கட்டும் என அவர்
தெரிவித்தார்.
அம்னோவை விட்டு சிலர் விலகியது உண்மைதான். சிலர் அனுவார்
மூசாவை பின்பற்றி வெளியே சென்று விட்டனர். சிலர் பாரிசான்-
பாக்கத்தான் கூட்டணி பிடிக்காமல் கட்சியிலிருந்து விலகி விட்டனர்.
எனினும், அந்த எண்ணிக்கை அதிகம் இல்லை என்றார் அவர்.
நேற்றிரவு, திரங்கானு அம்னோவின் ஏற்பாட்டிலான விருந்து நிகழ்வில்
கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத்
தெரிவித்தார்.
நாட்டின் 15வது பொதுத் தேர்தலுக்கு முன்னரே அம்னோ 20 லட்சம்
உறுப்பினர்களை இழந்து விட்டதாகச் செனாவாங்கில் நடைபெற்ற
பெரிக்கத்தான் நேஷனல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது
தற்போது பாஸ் கட்சி உறுப்பினராக இருக்கும் அனுவார் மூசா
கூறியிருந்தார்.
இதனிடையே, திரங்கானு மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு
குறித்து வினவப்பட்ட போது, ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் மாநிலத் தேர்தல்களில் வெற்றி பெறுவது சாத்தியமான ஒன்றே என ஹசான் பதிலளித்தார்.








