கோலாலம்பூர், ஜூன் 13 – கடந்த சனிக்கிழமை காலமான சுத்த சமாஜா வாழ்க்கை சங்கத்தின் (ப்யூர் லைஃப் சொசைட்டி யின்) வாழ்நாள் தலைவரான டத்தின் அன்னை ஏ.மங்கலம் அவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.
“சுத்த சமாஜா சங்கம் என்பது ஆதரவற்றோர் மற்றும் ஏழைகளுக்குத் தங்குமிடம் வழங்கும் ஒரு அமைப்பாகும்.
"மலேசியர்கள் நிச்சயம் அவரது கருணை மற்றும் நல்ல சேவையை நினைவில் கொள்வார்கள், குறிப்பாக மனிதாபிமான திட்டங்களில்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
மலேசியாவின் அன்னை தெரசா என்று அழைக்கப்பட்ட அன்னை மங்களம் பெட்டாலிங் ஜெயா வில் உள்ள அசுந்தா மருத்துவமனையில் தனது 97வது வயதில் காலமானார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் 1926இல் சிங்கப்பூரில் பிறந்தார். பின், அரசு சாரா நிறுவனத்தில் சேர்வதற்கு முன்பு 1948இல் ஆசிரியராகப் பணிபுரிய கோலாலம்பூருக்கு வந்துள்ளார்.
1949இல் சாமி சத்யாநந்தாவால் சுத்த சமாஜா சங்கம் தொடங்கி வைக்கப்பட்டது. ஆதரவற்றோர், கைவிடப்பட்ட குழந்தைகள் மற்றும் சிதைந்த குடும்பங்களில் இருந்து வருபவர்களின் நல்வாழ்வை நிர்வகிப்பதற்கும் உறுதி செய்வதற்கும் இந்த சங்கம் நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- பெர்னாமா








