ஷா ஆலம், ஜூன் 13- நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில் டோல்
கட்டணத்தைக் குறைப்பதற்கு ஏதுவாக அவற்றை கையகப்படுத்துவது
தொடர்பான பரிந்துரை நாட்டின் நிதி நிலைமை வலுப்பெற்றவுடன்
கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.
பெரும் தொகை சம்பந்தப்பட்டுள்ள காரணத்தால் அந்த திட்டத்தை
தற்போதைக்கு அமல்படுத்த முடியாது என்று பொதுப்பணித் துறை
அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.
தற்போது செயல்பட்டு வரும் எந்த நெடுஞ்சாலை நிர்வாகத்தையும்
எடுத்துக் கொள்ள அரசாங்கம் தற்போதைக்குத் திட்டமிடவில்லை. அதிக
நிதிச் செலவினத்தை இத்திட்டம் உள்ளடக்கியுள்ளதே இதற்கு காரணம்
என்று அவர் கூறியதாகப் பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்காலத்தில் நாட்டின் நிதி நிலை வலுப்பெற்றால் இந்த
பரிந்துரையைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள அரசாங்கம் தயாராக
உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
மக்களவையில் இன்று பாசீர் மாஸ் தொகுதி உறுப்பினர் அகமது ஃபாட்லி
ஷாரி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
மக்களின் சுமையைக் குறைப்பதற்கு ஏதுவாக நெடுஞ்சாலைகளை
அரசாங்கம் தனது கடப்பாட்டில் எடுத்து டோல் கட்டணத்தைச் சிறிது
சிறிதாகக் குறைப்பதற்குரிய சாத்தியம் உள்ளதா என அகமது ஃபாட்லி
கேள்வியெழுப்பியிருந்தார்.
அமானாட் லெபோராயா ராக்யாட் பெர்ஹாட் (ஏ.எல்.ஆர்.) வாயிலாகக்
கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள நான்கு நெடுஞ்சாலைகளைத் தனது
கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வது தொடர்பான அறிவிப்பை அரசாங்கம்
கடந்தாண்டு வெளியிட்டிருந்தது.








