புத்ரா ஜெயா, ஜூன் 13- மோசமான நிலையிலுள்ள பள்ளிகள் மற்றும்
கிளினிக்குகளைச் சீரமைக்கும் பணி விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். பள்ளிகள் மற்றும் கிளினிக்குகளைச் சீரமைக்கும் பணிகளின் அமலாக்கம் மிகவும் மந்தமாக உள்ளதால் நிதியமைச்சருமான அவர் ஏமாற்றம் தெரிவித்தார்.
நாட்டில் மோசமான நிலையிலுள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும்
கிளினிக்குள் இவ்வாண்டு இறுதிக்குள் சீரமைக்கப்படும் என அரசாங்கம்
அறிவித்திருந்த போதிலும், மாவட்ட அலுவலக நிலையில் அமலாக்கம் மிகவும் மந்தமாக உள்ளது என அவர் சொன்னார்.
நிதி ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்டு விட்ட போதிலும் பள்ளிகளில்
கழிப்பறைகளை கட்டுவதற்கும் ஒழுகும் கூரைகளை சரி செய்வதற்கும்
இரண்டு ஆண்டுகள் வரை காத்திருக்க முடியாது, ஆகவே, இத்தகைய சிறு
திட்டங்களுக்கு நிதி விரைவாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றார்
அவர்.
ஆகவே, இத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி உடனடியாக விநியோகம்
செய்யப்பட வேண்டும் என்று இன்று இங்குள்ள நிதியமைச்சில் நடைபெற்ற
மாதாந்திர ஒன்று கூடும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர்
சொன்னார்.
இத்தகைய சிறு குத்தகைத் திட்டங்களை மேற்கொள்வதிலிருந்து
பொதுப்பணி இலாகாவை விடுவிப்பது தொடர்பில் தாம் பொதுப்பணித்
துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கியுடன்
விவாதித்துள்ளதாகவும் அன்வார் தெரிவித்தார்.








