ஷா ஆலம், மே 12- ரவாங்கில் உள்ள சிலாங்கூர் பசுமை எரிசக்தி ஈக்கோ
பூங்காவில் கழிவுப் பொருள்களை எரிசக்தியாக மாற்றும் திட்டத்திற்கு
ஆறு மாதம் முதல் ஓராண்டு காலத்தில் அங்கீகாரம் கிடைத்து விடும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டம் தற்போது சுற்றுச் சூழல் இலாகாவினால் இடர் மதிப்பீடு
செய்யப்பட்டு வருகிறது என்று கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட்
மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ ரஹிம் தாஹிர்
கூறினார்.
குப்பைகளை அகற்றுவதில் எதிர்நோக்கும் பிரச்சனையைக் களைவதிலும்
மாசுபாட்டைத் தடுப்பதிலும் இந்த கழிவுகளை எரிசக்தியாக மாற்றும்
திட்டம் பெரிதும் துணை புரியும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இந்த பிரதான திட்டத்தின் கீழ் 7,000 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு
குப்பை அழிப்பு மையங்களில் அழிக்கப்படும். இந்த திட்டத்திற்கு
அங்கீகாரம் கிடைக்க ஆறு மாதம் முதல் ஓராண்டு வரை ஆகலாம்
என்றார் அவர்.
இந்த திட்டத்தின் முதல் கட்டப் பணிக்காக நாங்கள் 60 ஏக்கர் நிலத்தை
மேம்படுத்தவுள்ளோம். இந்த ஈக்கோ பசுமை பூங்காவில் தினமும் 2,400
டன் குப்பைகள் எரிக்கப்படும். இதன் மூலம் 50 மெகவாட் மின்சாரம்
உற்பத்தி செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெட் நிறுவனத்தின்
ஏற்பாட்டில் இன்று இங்குள்ள ஷா ஆலம் மாநாட்டு மையத்தில்
நடைபெற்ற நோன்புப் பெருநாள் பொது உபசரிப்புக்குப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனை கூறினார்.
கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின்
வாயிலாக இந்த திட்டத்தை மேம்படுத்துவதற்கு 450 கோடி வெள்ளி ஒதுக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்தாண்டு நவம்பர் மாதம் 25ஆம் தேதி கூறியிருந்தார்.








