மஞ்சோங், ஏப் 5- கட்டுப்பாட்டை இழந்த லோரி கடலில் விழுந்ததில் அதன் ஓட்டுநர் நீரில் மூழ்கி மாண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இச்சம்பவம் இங்குள்ள லுமுட் கடல்சார் முனையத்தில் நேற்று மாலை 5.30 மணியளவில் நிகழ்ந்தது.
இருபது வயது மதிக்கத்தக்க ஆடவர் ஓட்டிய லோரி கடலில் சுமார் 11 மீட்டர் ஆழத்தில் விழுந்ததாக சித்தியவான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் நடவடிக்கை பிரிவுத் தலைவர் முகமது அஜிசி ஜக்காரியா கூறியதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
லோரி கடலில் விழுந்த பகுதிக்கு அருகில் இருந்த கப்பல் சற்று தொலைக்கு அகற்றப்பட்டப் பின்னர் தேடி மீட்கும் பணி தொடங்கப்பட்டதாக அவர் சொன்னார்.
பங்கோர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நீர் மீட்புக் குழுவினரின் ஒத்துழைப்புடன் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கடலில் விழுந்த லோரியை வெளியில் எடுப்பதற்கு துறைமுகத்தில் இருந்த இரு கிரேன்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.








