புத்ராஜெயா, ஏப் 4- நாட்டில் அதிகரிப்பைக் காணவுள்ள அந்நிய முதலீடுகளைக் கையாள்வதற்கு ஏதுவாக அடிப்படை வசதிகள் மற்றும் போதுமான மனித ஆற்றலுடன் தயாராக இருக்கும்படி அனைத்து அமைச்சுகள் மற்றும் இலாகாக்களுக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.
கிடைக்கும் வாய்ப்புகளை மலேசியர்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் தவறவிட்டால் அரசாங்கத்தின் முயற்சிகள் யாவும் வீணாகும் என்று அவர் சொன்னார்.
வாய்ப்புகளைத் தவற விடும் பட்சத்தில் தொழில்நுட்ப மாற்றம் மற்றும் நிபுணத்துவப் பயிற்சிகளை வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வராமல் போகும் சாத்தியம் உள்ளது என்று இன்று காலை நிதியமைச்சின் மாதாந்திர ஒன்று கூடும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு தயாராகும் விஷயத்தில் திறன்மிக்க மனித ஆற்றல் உட்பட இன்னும் மேம்படுத்தப்பட வேண்டிய அம்சங்கள் கண்டறிவதில் நிதியமைச்சு ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப்பையும் வழங்க வேண்டும் என்று நிதியமைச்சருமான அவர் வலியுறுத்தினார்.
அவசியம் ஏற்பட்டால் உள்நாட்டினருக்குத் தீவிரப் பயிற்சிகள் வழங்குவதற்கு ஏதுவாக பிரத்தியேகமாகக் கூடுதல் நிதி ஒதுக்கீட்டையும் வழங்கலாம். இல்லாவிடில் வெளிநாடுகளிலிருந்து தொழிலாளர்களை இறக்குமதி செய்ய வேண்டி வரும் என்றார் அவர்
அமேஸோன் வெப் செர்விசஸ் நிறுவனத்தின் 2550 கோடி வெள்ளி முதலீடு மற்றும் சீனாவின் 17,000 கோடி வெள்ளி முதலீடு மலேசியாவுக்குச் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதோடு பல நாடுகள் நாட்டில் முதலீடு செய்வதிலும் ஆர்வம் காட்டுகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.








