கோல கங்சார், ஏப் 4- சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.) பல்வேறு
சேவைகளுக்காக இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வரை 80 கோடியே 70
லட்சம் வெள்ளியை வசூலித்துள்ளது. அத்தொகையில் 2 கோடியே 88
லட்சம் வெள்ளி பேராக் மாநிலத்திலிருந்து பெறப்பட்டது.
பேராக் மாநிலத்தில் பெறப்பட்ட தொகையில் 196,065 வெள்ளி
ஜே.பி.ஜே.வின் நடமாடும் முகப்பிடங்கள் வாயிலாகவும் எஞ்சிய 17 லட்சம்
வெள்ளி மூன்றாம் கட்ட சாவடிகள் வாயிலாகவும் பெறப்பட்டதாக
அத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஜைலானி ஹஷிம் கூறினார்.
ஜே.பி.ஜே,வின் தலைசிறந்த பணியாளர்களின் கூட்டு முயற்சியின்
வாயிலாக இந்த அடைவு நிலை பதிவு செய்யப்பட்டது. ஜே.பி.ஜே.வின்
விவேகப் பங்காளிகள், துறை சாரந்த தரப்பினர் மற்றும் பங்களிப்பாளர்கள்
இந்த வெற்றிக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ தங்களின்
பங்களிப்பை வழங்கியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு மார்ச் மாதம் வரை நாடு முழுவதும் 3 கோடியே 53 லட்சத்து
9 ஆயிரத்து 623 வாகனங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவற்றில் 23 லட்சத்து
71 ஆயிரத்து 318 வாகனங்கள் பேராக் மாநிலத்தில் பதிவு
செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
அதே சமயம், நாடு முழுவதும் உள்ள வாகனமோட்டும் லைசென்ஸ்
உள்ளவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 47 லட்சத்து 57 ஆயிரத்து 707
என்றும் அவர் கூறினார்.








