ANTARABANGSA

ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளில் கொள்ளையிடம் கும்பல் முறியடிப்பு

24 மார்ச் 2023, 8:51 AM
ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளில் கொள்ளையிடம் கும்பல் முறியடிப்பு

மலாக்கா, மார்ச் 24- மலாக்கா, சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில உள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வீடுகளில் புகுந்து கொள்ளையிட்டு வந்த கும்பலின் நடவடிக்கையை போலீசார் முறியடித்துள்ளனர்.

இம்மாதம் 14 மற்றும் 22ஆம் தேதிகளில் மலாக்காவுக்கு வெளியே மேற்கொள்ளப்பட்ட வெவ்வேறு நடவடிக்கைகளில் 34 முதல் 51 வயது வரையிலான மூன்று ஆடவர்களும் ஒரு பெண்மணியும் கைது செய்யப்பட்டதாக மலாக்கா தெங்கா மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி கிறிஸ்தோபர் பாட்டிட் கூறினார்.

கடந்த மார்ச் 2 ஆம் தேதி இங்குள்ள கிளேபாங்கில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நிகழ்ந்த திருட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் இக்கும்பல் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அச்சம்பவத்தின் போது அவ்வீட்டிலிருந்த ரொக்கம், நகைகள் உள்பட 50,000 வெள்ளி மதிப்புள்ள பொருள்களை அக்கும்பல் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றதாக இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் சொன்னார்.

இந்த கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுப் பிரிவினர்  அக்கும்பல் உறுப்பினர்களைக் கைது செய்தனர் என்றார் அவர்.

பிடிபட்ட கும்பலிடமிருந்து விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள், கைப்பை, கைப்பேசிகள், இரு வாகனங்கள், வீடு உடைக்கப்பயன்படும் உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன என அவர் கூறினார்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.