MEDIA STATEMENT

ஊழல் குற்றச்சாட்டு- 20 லட்சம் வெள்ளி ஜாமீனில் மொகிதீன்  விடுவிப்பு

10 மார்ச் 2023, 6:16 AM
ஊழல் குற்றச்சாட்டு- 20 லட்சம் வெள்ளி ஜாமீனில்  மொகிதீன்  விடுவிப்பு

கோலாலம்பூர், மார்ச் 10- பெர்சத்து கட்சிக்கு கையூட்டாக 23 கோடியே 25 லட்சம் வெள்ளியை பெறுவதற்கு பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதாக நான்கு குற்றச்சாட்டுகளையும் சட்டவிரோத நடவடிக்கை வாயிலாக 19 கோடியே 50 லட்சம் வெள்ளி பெற்றது தொடர்பில் இரு குற்றச்சாட்டுகளையும் எதிர்நோக்கியுள்ள முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ  மொகிதீன் யாசினை 20 லட்சம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்க இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

பெர்சத்து கட்சியின் தலைவருமான அவரை இரு நபர் உத்தரவாதத்துடன் ஜாமீனில் விடுவிக்க அனுமதி வழங்கிய நீதிபதி அஸூரா அவி, வழக்கு விசாரணை முடியும் வரை அனைத்துலக கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்படியும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் மறு விசாரணை வரும் மே மாதம் 26ஆம் தேதி நடைபெறும் என்றும் நீதிபதி தெரிவித்தார்,

முன்னதாக,  மொகிதீனை  இரு நபர் உத்தரவாதத்துடன் 20 லட்சம் வெள்ளி ஜாமீனில் விடுக்கவும் கூடுதல் நிபந்தனையாக அனைத்துலக கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் டத்தோ அகமது தெரிருடின் முகமது சாலே நீதிமன்றத்திடம் பரிந்துரைத்தார்.

ஜாமீன் தொகை மற்றும் கூடுதல் நிபந்தனையை தாங்கள் ஏற்றுக் கொள்வதாக மொகிதீன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டத்தோ கே. குமரேந்திரன் நீதிமன்றத்திடம் தெரிவித்தார்.

 அரசுத் தரப்பில் துணை பப்ளிக் புரோசிகியூட்டர் டத்தோ ஃபாரிட்ஸ் கோஹிம் அப்துல்லா, டத்தோ வான் ஷாருடின் வான் லாடின், அகமது அக்ராம் காரிப், நோராலிஸ் மாட், நோர் அஸ்மா அகமது, ரஷிடா மூர்னி அஸ்மி, முகமது அஸ்ராப் முகமது தாஹிர், கலைவாணி அண்ணாதுரை, மாஸியா மொஹைடி ஆகியோர் இந்த வழக்கை நடத்துகின்றனர்.

மொகிதீனைப் பிரதிநிதித்து டத்தோ கே. குமரேந்திரனோடு டத்தோ ரோஸ்லி  டாஹ்லான், டத்தோ தக்கியுடின் ஹசான், சேட்டன் ஜட்வானி, முகமது ஈசா முகமது பாஷீர், தே சீ கூன், வர்ஷா செல்வி ஆகியோர் ஆஜராகின்றனர்.

பாகோ நாடாடாளுமன்ற உறுப்பினருமான டான்ஸ்ரீ மொகிதீன் தனக்கெதிராக சுமத்தப்பட்ட ஆறு குற்றச்சாட்டுகளையும் மறுத்து விசாரணை கோரியுள்ளார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.