ஷா ஆலம், பிப் 20- காஜாங் தொகுதியிலுள்ள 600 தாபோங் வாரிசான் அனாக் சிலாங்கூர் (தாவாஸ்) நிதித் திட்ட உறுப்பினர்களுக்கு பள்ளி உபகரணங்கள் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பள்ளிப் பைகள் மற்றும் எழுது பொருள்கள் அடங்கிய இந்த உதவி புதிய தவணையில் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு உத்வேகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.
பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதில் பெற்றோர்கள் எதிர்நோக்கும் சிரமங்களை குறைப்பதில் இந்த திட்டம் ஓரளவு துணை புரியும். இன்றைய சூழலில் பள்ளிப் பைகளின் விலை மிக அதிகமாக உள்ளது என அவர் தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் கீழ் 2015ஆம் ஆண்டில் பிறந்த அதாவது இவ்வாண்டு முதலாம் வகுப்பில் நுழையும் மாணவர்களுக்கு இந்த உதவி வழங்கப்படுகிறது. பள்ளியில் முதன் முறையாக நுழையும் மாணவர்களுக்கு இந்த உபகரணங்கள் உற்சாகத்தைத் தரும் என எதிர்பார்க்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டில் முதலாம் வகுப்பில் நுழையும் 44,484 தாவாஸ் உறுப்பினர்கள் மாநில அரசின் உதவியைப் பெறுவர் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்தாண்டு டிசம்பர் 4ஆம் தேதி கூறியிருந்தார்.







