MEDIA STATEMENT

நான்கு மாதக் குழந்தை சித்திரவதை- பராமரிப்பாளர் மீது குற்றச்சாட்டு

15 ஜனவரி 2023, 11:28 AM
நான்கு மாதக் குழந்தை சித்திரவதை- பராமரிப்பாளர் மீது குற்றச்சாட்டு

கோல திரங்கானு, ஜன 15- நான்கு மாதக் குழந்தையை கோமா நிலைக்குச் செல்லும் அளவுக்கு துன்புறுத்தியதாக பதிவு பெற்ற சிறார் பராமரிப்பு மையம் (தாஸ்கா) ஒன்றின் பராமரிப்பாளர் மீது இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

ராஜா நோர் இஃபா ராஜா நோர்டின் (வயது 27) என்ற அந்த பராமரிப்பாளர் தனக்கு எதிராக குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார். 

இம்மாதம் 1 மற்றும் 3ஆம் தேதிக்கு இடையே அந்த பராமரிப்பு மையத்தில் அக்குழந்தையின் தலையில் இரத்தக் கசிவும் மண்டை ஓட்டின் இடது பக்கத்தில் விரிசலும் ஏற்படும் அளவுக்கு அக்குழந்தையை வன்கொடுமை புரிந்ததாக அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 50,000 வெள்ளிக்கும் மேற்போகாத அபராதம் அல்லது 20 ஆண்டுச் சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் 2001 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 31(1)(ஏ) பிரிவின் கீழ் அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் மறு விசாரணையை வரும் பிப்ரவரி 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி நோரியா ஓஸ்மான், குற்றஞ்சாட்டப்பட்டவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 30,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க அனுமதி வழங்கினார்.

இங்குள்ள பத்து பூரோக்கில் உள்ள பதிவு பெற்ற சிறார் பராமரிப்பு மையத்தில் உள்ள நான்கு மாதக் குழந்தை கோமா நிலைக்குச் செல்லும் அளவுக்கு சித்திரவதை செய்யப்பட்டதாக அண்மையில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.