ஷா ஆலம், ஜன 3- சிலாங்கூர் மாநில அரசின் “ரோடா டாருள் ஏசான்“ (ரைட்) திட்டத்தில் பங்கேற்றவர்களில் பலர் மாதம் ஐந்து இலக்கம் வரையிலான வருமானத்தைப் பெறுவதாக மந்திரி புசார் கூறினார்.
வருமானத்தை அதிகரிப்பதற்கு ஏதுவாக மின்-அழைப்புத் துறையை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த “ரைட்“ திட்டத்தை மாநில அரசு கடந்த 2020ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த திட்டத்திற்கு இது வரை 14,000க்கும் அதிகமான விண்ணப்பங்களைப் பெற்றுள்ளோம். கடந்தாண்டில் மட்டும் இத்திட்டத்திற்கு கிடைத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 6,200 ஆகும் என அவர் தெரிவித்தார்.
இந்த “ரைட்“ திட்டத்தின் மூலம் இதுவரை 6,500 இளையோர் பயன் பெற்றுள்ளனர். அவர்களில் பலர் ஐந்து இலக்க வருமானத்தைப் பெற்றுள்ளனர் என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் சொன்னார்.
இந்த திட்ட பங்கேற்பாளர்களில் 3,000 பேருக்கு ஊழியர் சேம நிதி, சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு மற்றும் சிலாங்கூர் பொது காப்புறுதி பாதுகாப்பு (இன்சான்) சலுகைகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன என்றார் அவர்.
கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலுக்குப் பின்னர் சமுதாயம் வருமானத்திற்கு மின்-அழைப்பு தொழிலை பெரிதும் சார்ந்திருந்ததை கருத்தில் கொண்டு இந்த ரைட் திட்டத்தை மாநில அரசு உருவாக்கியதாக அவர் குறிப்பிட்டார்.
ஒவ்வோராண்டும் 500 வெள்ளி ரொக்க சலுகைகளை வழங்கும் திட்டங்களோடு கூடுதல் அனுகூலமாக ஊழியர் சேமநிதிக்கு 50 வெள்ளி சந்தா செலுத்தும் திட்டத்தையும் மாநில அரசு அமல்படுத்தி வருகிறது என அவர் தெரிவித்தார்.








