பத்தாங் காலி, டிச 18- இங்குள்ள கோத்தோங் ஜெயா, ஃபாதர்ஸ் ஆர்கானிக் ஃபார்ம் முகாம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இன்னும் காணாமல் போன 9 பேரைத் தேடி மீட்கும் நடவடிக்கை இன்று காலை மீண்டும் தொடங்கப்பட்டது.
இன்று அதிகாலை 4.00 மணியளவில் நிறுத்தப்பட்ட அந்த தேடி மீட்கும் பணி இன்று காலை 9.00 மணிக்கு மறுபடியும் தொடங்கப்பட்டது. இந்த தேடுதல் பணியில் பல்வேறு அரசு துறைகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளதுடன் மோப்ப நாய்களும் கனரக வாகனங்களும் இதில் பயன்படுத்தப் படுகின்றன.
இந்த தேடுதல் நடவடிக்கை ஏ பிரிவு (கேம் ஹில் வியூ), பி பிரிவு (கேம் ஃபார்ம் வியூ), சி பிரிவு (கேம் ரிவர்சைட்) ஆகிய இடங்களை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது.
சம்பவ இடத்தில் இன்று காலை வானிலை தெளிவாக காணப்படுகிறது. பல்வேறு ஊடகங்களைச் சேர்ந்த நிருபர்களும் இன்று காலை 7.00 மணி முதல் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இந்த பேரிடரில் மொத்தம் 94 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 24 பேர் உயிரிழந்தது நேற்று வரை உறுதி செய்யப்பட்ட வேளையில் 61 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் ஒன்பது பேரைக் காணவில்லை.







