ஷா ஆலம், நவ 21- இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற நாட்டின் பதினைந்தாவது பொதுத் தேர்தலில் பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் தமக்கு ஏற்பட்ட தோல்வியை தாம் திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்வதாக ஹராப்பான் வேட்பாளரான நுருள் இஸா அன்வார் கூறினார்.
தமக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்ட அவர், மீண்டும் தேர்தல் களத்திற்கு திரும்புவேன் என்றும் சூளுரைத்தார்.
பெர்மாத்தாங் பாவ் மக்களை நாடாளுமன்றத்தில் ஒரு தவணை பிரதிநிதிப்பதற்கு கிடைத்த வாய்ப்பு வாழ்நாளில் தமக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகும் என்று ஹராப்பான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் புதல்வியான அவர் தெரிவித்தார்.
எல்லா தேர்தல்களிலும் கட்டிக் காக்கப்பட வேண்டிய ஜனநாயக நடைமுறை இதுவாகும். இதனை நான் திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்கிறேன்.
எனது சகாக்களே, கவலைப் படாதீர்கள். இறைவன் அருளால் நான் மீண்டும் வருவேன் என்று அவர் தனது இண்ட்ஸ்டாகிராம் பதிவில் கூறியுள்ளார்.
இத்தேர்தலில் நுருள் இஸா பினாங்கு மாநில பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் முகமது பாவ்ஷ் முகமது ஜானிடம் 5,272 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.








