கோலாலம்பூர், நவ 1- சபா மாநிலத்தின் புகாயா சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் மற்றும் 15வது பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை நடைபெறும்.
தேர்வு செய்யப்பட்ட 222 வேட்பு மனுத்தாக்கல் மையங்களில் உள்ள தேர்தல் அதிகாரிகளிடம் வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையத்தின் செயலாளர் டத்தோ இக்மாருடின் இஷாக் கூறினார்.
இந்த வேட்புமனுவை வேட்பாளர், வேட்பாளரை முன்மொழிபவர் மற்றும் வழி மொழிபவர் தாக்கல் செய்யலாம். அல்லது, அவரகளில் இருவர் அல்லது ஒருவரும் தாக்கல் செய்யலாம் என்று அவர் சொன்னார்.
வேட்பு மனுத்தாக்கல் நிகழ்வு சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு ஏதுவாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு பாரங்களை முறையாக பூர்த்தி செய்து, அதனை தேர்தல் அதிகாரி அலுவலகம், தேசிய அல்லது மாநில தேர்தல் அலுவலகத்தில் முன்கூட்டியே சர்பார்த்துக் கொள்ளும் படியும் அவர் கேட்டுக் கொண்டார்.
வேட்பாளர்கள் முன்கூட்டியே வைப்புத் தொகையை செலுத்தி விட வேண்டும். வைப்புத் தொகையை செலுத்தியதற்கான ஆதாரமாக அதற்கான ரசீதை வேட்பு மனுத்தாக்கல் தினத்தன்று உடன் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் நினைவுறுத்தினார்.
வேட்பு மனுவைத் தாக்கல் செய்யும் போது தேர்தலில் அரசியல் கட்சிகளின் சின்னத்தை பயன்படுத்துவதற்கு வழங்கப்பட்ட அனுமதிக் கடிதத்தையும் சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் சமர்பிக்க வேண்டும் என்றார் அவர்.
வேட்பு மனுத்தாக்கல் தினத்தன்று வேட்பாளர், முன்மொழிபவர் மற்றும் வழிமொழிபவர் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் மையத்தில் அனுமதிக்கப்படுவர். பொதுமக்களும் கட்சிகளின் ஆதரவாளர்களும் வேட்பு மனுத்தாக்கல் மையத்திலிருந்து 50 மீட்டருக்கு அப்பால் இருக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.








