ஷா ஆலம், அக் 10- கோல லங்காட், தாமான் ஸ்ரீ புத்ரா குடியிருப்பு பகுதியில் துப்புரவு இயக்கத்தை சிலாங்கூரில் குப்பைகளை அகற்றுவதற்கும் பொது சுகாதாரத்தை உறுதி செய்வதற்கும் பொறுப்பேற்றுள்ள கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் நேற்று மேற்கொண்டது.
ஏடிஸ் கொசுக்களின் உற்பத்தியை தடுப்பது உள்ளிட்ட நோக்கங்களுக்காக இந்த துப்புரவு இயக்கம் மேற்கொள்ளப்பட்டதாக அந்நிறுவனம் கூறியது.
தாமான் ஸ்ரீ புத்ரா குடியிருப்பைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சுத்தம் செய்யும் பணியில் ஆறு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக அந்நிறுவனம் தனது போஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
இந்த துப்புரவு இயக்கத்தில் மோரிப் சட்டமன்ற உறுப்பினர் ஹஸ்னுள் பகாருடினும் கலந்து கொண்டார்.
குப்பைகளால் நீரோட்டம் தடைபட்டுள்ள கால்வாய்கள் குறித்த தகவல்களை 019-2742824 என்ற எண்களில் தங்களுக்கு தெரிவித்து உதவுமாறு அந்நிறுவனம் பொது மக்களை கேட்டுக் கொண்டது.
மலேசிய வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளபடி வரும் நவம்பர் மாதம் வெள்ளம் ஏற்படும் சாத்தியத்தைக் கருத்தில் கொண்டு வடிகால்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்யும் பணியில் தாங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அது குறிப்பிட்டது.
இவ்வாண்டு இறுதியில் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் கடும் மழை மற்றும் வெள்ளத்தை எதிர் கொள்வதற்காக எங்கள் நிறுவனத்தின் 1,800 பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளன என்றும் அந்நிறுவனம் தெரிவித்தது.







