புத்ரா ஜெயா, அக் 8- நான்கு மாநிலங்களில் நேற்று பெய்த அடைமழை காரணமாக அங்குள்ள முக்கிய ஆறுகளில் நீர் மட்டம் உயர்வு கண்ட நிலையில் இன்று பாதுகாப்பான அளவுக்கு குறைந்துள்ளது.
சம்பந்தப்பட்ட பகுதிகளில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உறுப்பினர்கள் மேற்கொண்ட கண்காணிப்பின் போது அப்பகுதிகளில் நிலைமை சீராக உள்ளது தெரியவந்தது என்று மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது ஹம்டான் வாஹிட் கூறினார்.
அந்த ஆறுகளில் தற்காலிகமாக நீர் மட்டம் உயர்வு கண்டது. தற்போது நாங்கள் மேற்கொண்ட சோதனையில் அவற்றின் நீர் மட்டம் திருப்தியளிக்கும் வகையில் உள்ளது என்று அவர் சொன்னார்.
எனினும், சம்பந்தப்பட்ட ஆறுகளை ஆகாய மார்க்கமாக கண்காணிக்கும் பணியில் தீயணைப்புத் துறையினரும் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று இங்கு நடைபெற்ற வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சு நிலையிலான 2022 ஆம் ஆண்டு தேசிய விளையாட்டு தின நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை பெய்த அடைமழை காரணமாக ஜோகூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் நீர் மட்டம் உயர்ந்து காணப்படுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.







