ஷா ஆலம், அக் 8- கடல் பெருக்கு காரணமாக , வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ள நான்கு இடங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாக கிள்ளான் நகராண்மைக் கழகம் கூறியுள்ளது.
பெங்காலான் ஜாலான் ஓஸ்மான் பாரு ரந்தாவ் பாஞ்சாங் கிள்ளான், தாமான் செலாட் டாமாய், சுங்கை கிராமாட் மீனவர் படகுத் துறை, பத்து 4, தாமான் தெலுக் காடோங் இண்டா ஆகியவையே அந்த நான்கு இடங்களாகும் என்று அது தெரிவித்தது.
இன்று அதிகாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை பந்தாஸ் எனப்படும் விரைவு பணிக்குழு மேற்கொண்ட சோதனையில் கடலில் நீர் மட்டம் 5.1 மீட்டர் வரை உயர்ந்தது கண்டு பிடிக்கப்பட்டது என நகராண்மைக்கழகம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
பெங்கலான் ஜாலான் ஓஸ்மான் பாரு ரந்தாவ் பாஞ்சாங் கிள்ளானில் கடல் அலைகள் உயர்ந்த போதிலும் கரைகளில் நீர் பெருக்கெடுக்கவில்லை. கால்வாய்களிலும் குறைவான நீர் காணப்பட்டது.
தாமான் செலாட் டாமாயில் வெள்ளம் ஏற்படவில்லை. மதகு மூடப்பட்டிருந்ததோடு நல்ல நிலையிலும் காணப்பட்டது. சுற்றுப்புறங்களிலும் நிலைமை சீராக இருந்ததோடு மழையும் பெய்யவில்லை.
சுங்கை கிராமாட் பத்து 4, மீனவர் படகுத் துறையில் வெள்ளம் ஏற்படவில்லை. கடல் மட்டம் உயர்ந்த போதிலும் நீர் மதகை தாண்டவில்லை.
தாமான் தெலுக் காடோங் இண்டாவில் வெள்ளம் ஏற்படவில்லை. அதிகாலை 4.55 மணியளவில் முழு கடல் பெருக்கு ஏற்பட்டது. கடல் அலை 5.1 மீட்டர் வரை உயர்ந்தது.








