ACTIVITIES AND ADS

மலையேறும்போது சிங்கை பிரஜை மாயம்- தேடுதல் நடவடிக்கை தீவிரம்

18 செப்டெம்பர் 2022, 6:00 AM
மலையேறும்போது சிங்கை பிரஜை மாயம்- தேடுதல் நடவடிக்கை தீவிரம்

ஜோகூர் பாரு, செப் 18-   பந்தாய் தீமோர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் நேற்று மலையேறும் பணியில் ஈடுபட்டிருந்த சிங்கப்பூர் பிரஜை ஒருவர் வழி தவறி காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் உள்ளூர் ஆடவர் ஒருவரிடமிருந்து  நேற்று மாலை 3.26 மணிக்கு    தங்களுக்கு புகார்  கிடைத்ததாக கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஹூசேன் ஜமோரா கூறினார்.

அந்த வனப்பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க ஜேசன் ரென் ஜீ என்ற அந்த நண்பருடன் தாம் நடைப்பயணம் மேற்கொண்டிருந்த போது  ​​அவருடனான தொடர்பை இழந்ததாக அந்த உள்ளூர் ஆடவர் தனது புகாரில் தெரிவித்துள்ளதாக ஹூசேன் சொன்னார்.

காலை சுமார் 11.30 மணியளவில் அவ்விருவரும் மலையேற ஆரம்பித்தனர். பிற்பகல் 1.00 மணியளவில் பாதிக்கப்பட்டவரும் புகார்தாரரும் தனித்தனியே பிரிந்து விட்டனர் என்றார் அவர்.

அதைத் தொடர்ந்து, காணாமல் போனதாகக் கூறப்படும் நபரைத் தேடுவதற்காக பத்து அம்பாட் காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் காவலர்கள் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக  அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார் .

இந்த தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் கோத்தா திங்கி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மற்றும் தெற்கு ஜோகூர் பிராந்தியத்தின் (கோத்தி திங்கி) வனவியல் துறையும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நேற்று இரவு 11:30 மணி வரை பாதிக்கப்பட்டவர்  கண்டுபிடிக்கப்படவில்லை.  இருள் காரணமாக  தேடுதல் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு  இன்று மீண்டும் தொடங்கப்பட்டது என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.