MEDIA STATEMENT

மதில் சுவர் விழுந்து 4 வயதுச் சிறுமி பலி- அலோர் காஜாவில் சம்பவம்

13 ஏப்ரல் 2022, 12:11 PM
மதில் சுவர் விழுந்து 4 வயதுச் சிறுமி பலி- அலோர் காஜாவில் சம்பவம்

அலோர் காஜா, ஏப் 13- வீட்டின் மதில் சுவர் சரிந்து விழுந்து நான்கு வயது சிறுமி உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவம் இங்குள்ள கம்போங் புக்கிட் நங்காவில் நேற்று மாலை நிகழ்ந்தது.

ஐவர் கொண்ட குடும்பத்தில் கடைசி பிள்ளையான நோர் இமான் இர்டினா அப்துல் நுர் தலையில் பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்ததை அவரின் தாயார் அஸ்னாக்கியா மாட் அலி (வயது 45) மாலை 7.00 மணியளவில் கண்டதாக அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அர்ஷாட் அபு கூறினார்.

இச்சம்பவம் நிகழ்ந்த போது அச்சிறுமி தனியாக வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்ததாகவும் மற்ற பிள்ளைகள் வீட்டின் வரவேற்புக் கூடத்தில் இருந்ததாகவும் அவர் சொன்னார்.

நோன்பு துறப்புக்காக உணவு தயார் செய்து கொண்டிருந்த அச்சிறுமியின் தாயார், வீட்டின் வெளியே பலத்த சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்த போது வீட்டின் வராண்டாவில் உள்ள போத்தல் வடிவிலான மதில் சுவர் பெயர்ந்து சிறுமியின் தலையில் விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக அவர் தெரிவித்தார்.

அச்சிறுமி உடனடியாக அலோர் காஜா மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார் என அர்ஷாட் குறிப்பிட்டார்.

இச்சம்பவத்தில் குற்றச்செயல் எதுவும் நிகழவில்லை எனக் கூறிய அவர், திடீர் மரணமாக இச்சம்பவம் வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.