ANTARABANGSA

வாகனமோட்டும் லைசென்ஸ் விற்பனை மோசடி- எஸ்.பி.எம். மாணவர் உள்பட இருவர் கைது

4 ஏப்ரல் 2022, 11:40 AM

கோலாலம்பூர், ஏப் 4-  வாகனமோட்டும் லைசென்ஸ் விற்பனை மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் இவ்வாண்டு எஸ்.பி.எம்  தேர்வை எழுதவிருக்கும் மாணவர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மலாக்கா, டுரியான் துங்காலில் உள்ள வீட்டில் நேற்றிரவு 10.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில்  அந்த 17 வயது மாணவரும் 22 வயதுடைய மற்றொரு இளைஞரும் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் ஏசிபி மஹிடிஷாம் இஷாக் கூறினார்.

சாலை போக்குவரத்து இலாகாவின் நடைமுறைகளைப் பின்பற்றாமல் வாகனமோட்டும் லைசென்ஸ் பெற்றுத் தருவது தொடர்பான அறிவிப்பை ஆடவர் ஒருவர் முகநூல் பதிவொன்றில் கடந்த மாதம் 29 ஆம் தேதி கண்டதாக அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.

அந்த முகநூல் பதிவில் குறிப்பிடப்பட்ட வாட்ஸ்ஆப் புலனத்தில் உள்ள எண்களுடன் தொடர்பு கொண்ட அந்த ஆடவர் லைசென்ஸ் பெறுவதற்கான கட்டணமாக 490 வெள்ளியைச் செலுத்தினார் என்றார் அவர்.

கட்டணத்தைச் செலுத்திய பின்னரும் பலவித காரணங்களைக் கூறி கூடுதல் கட்டணத்தை அக்கும்பல் கோரியது. இதனால் சந்தேகமடைந்த அவ்வாடவர் இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தார் என அவர் தெரிவித்தார்.

இக்கும்பல் கடந்த ஆறு ஆண்டுகளாக தீவிரமாக செயல்பட்டு வந்ததாக கூறிய அவர், இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 420 பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.