ANTARABANGSA

அனைத்துலக எல்லை திறப்பு- சவூதி ஏர்லைன்ஸ் முதல் விமானமாக கே.எல்.ஐ.ஏ. வந்தடைந்தது

1 ஏப்ரல் 2022, 6:07 AM
அனைத்துலக எல்லை திறப்பு- சவூதி ஏர்லைன்ஸ் முதல் விமானமாக கே.எல்.ஐ.ஏ. வந்தடைந்தது

சிப்பாங், ஏப் 1- நாட்டின் எல்லைகள் இன்று திறக்கப்பட்டதைத் தொடர்ந்து முதல் விமானமாக சவூதி ஏர்லைன்ஸ் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (கே.எல்.ஐ.ஏ.) வந்தடைந்தது.

உம்ரா கடமையை நிறைவேற்றிய மலேசியர்கள் உள்ளிட்ட பயணிகளை ஏற்றியிருந்த அந்த விமானம் இன்று விடியற்காலை 1.00 மணியளவில் விமான நிலையம் வந்து சேர்ந்தது.

இதனைத் தொடர்ந்து 21 பயணிகளை ஏற்றியிருந்த வாடகை விமானம் மியன்மார், யங்கூனிலிருந்து அதிகாலை 3.15 அளவில் இங்கு வந்தடைந்தது.

விமான நிலையத்தில் பயணிகள் சோதனை நடைமுறை சீராக இருந்ததாக யங்கூனிலிருந்து வந்த பயணியான முகமது அக்ராம் அம்ரி (வயது 35) கூறினார்.

வழக்கமாக இரண்டு மணி நேரம் பிடிக்கக்கூடிய இந்த நடைமுறை இப்போது பத்தே நிமிடங்களில் முடிந்து விட்டதாக  அவர் குறிப்பிட்டார்.

எல்லைகள் திறக்கப்படுவதற்கு முன்னர் ஆர்.டி.-பி.சி.ஆர். சோதனை மேற்கொள்வது மற்றும் 14 நாட்கள் தனிமைப்படுத்துவது போன்ற நடைமுறைகள் அமலில் இருந்தன. ஆனால், இப்போது அந்த நடைமுறைகள் எளிதாக்கப்பட்டு விட்டன என்று வெளிநாட்டில் மூன்று மாத கால பணியை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய முகமது அக்ராம் கூறினார்.

இன்று காலை 9.30 மணி வரை ஜெட்டா, யங்கூன், மெர்பென், ஆஸ்திரேலியா, சென்னை, ஹைதராபாத், லண்டன், ஜாகர்த்தா, மஸ்காட், சிங்கப்பூர், டோஹா, கட்டார் ஆகிய நாடுகளிலிருந்து விமானங்கள் கே.எல்.ஐ.ஏ. வந்தடைந்தன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.