ECONOMY

தைப்பூசம்-கடும் எஸ்.ஒ.பி. நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளத் தயாராகும் பக்தர்கள்

10 ஜனவரி 2022, 7:09 AM
தைப்பூசம்-கடும் எஸ்.ஒ.பி. நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளத் தயாராகும் பக்தர்கள்

ஜோர்ஜ் டவுன், ஜன 10- இம்மாதம் 18 ஆம் தேதி கொண்டாடப் படவிருக்கும் தைப்பூசி விழாவின் போது முருகப் பெருமானுக்கு தேங்காய் உடைத்து நேர்த்திக் கடனைச் செலுத்துவது உள்ளிட்ட சில வழிபாட்டு முறைகளுக்கு தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சு, தேசிய பாதுகாப்பு மன்றம் மற்றும் பினாங்கு மாநில அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பக்தர்கள் ஏற்றுக் கொண்டதாக தோன்றுகிறது.

தேசிய பாதுகாப்பு மன்றம் நிர்ணயித்துள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின் (எஸ்.ஒ.பி.) படி இம்முறை தைப்பூச விழாவின் போது தேங்காய் உடைக்க அனுமதிக்கப் படாது என்பதால் தாம் தேங்காய்க்கு ஆர்டர் செய்யவில்லை என்று தேங்காய் விநியோகிப்பாளரான ஜோஸ் ஜெயசந்திரன் (வயது 37) கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்தாண்டை.ப போலவே இவ்வாண்டும் தைப்பூசத்திற்கு நாங்கள் தேங்காய்க்கு ஆர்டர் செய்யவில்லை. வழக்கம் போல் சமையலுக்கான தேங்காய் பால் மற்றும் தேங்காய் துருவல் ஆகியவற்றின் தேவைக்கு மட்டுமே தேங்காய்களை ஆர்டர் செய்துள்ளோம் என்றார் அவர்.

முன்பு தைப்பூசத்தின் போது ஒரு லட்சம் வரையிலான தேங்காய்களுக்கு ஆர்டர் கிடைக்கும். நோய்த் தொற்று காரணமாக கடந்த ஈராண்டுகளாக அந்த நேர்த்திக் கடனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் விழாக்காலங்களின் போது கணிசமான வருமானத்தை இழந்து விட்டோம் என்றார் அவர்.

இதனிடையே, இம்முறை காவடி ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் இந்த தைப்பூச விழா பொலிவிழந்ததாகவே இருக்கும் என்று ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக காவடி தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஆர். கருணாகரன் கூறினார்.

அரசாங்கம் மற்றும் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் உத்தரவை நாம் பின்பற்றித்தான் ஆக வேண்டும். ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதால் அந்த உத்தரவைப் பின்பற்றுவதில் தவறில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

பினாங்கில் காவடி நீங்கலாக பால் குட ஊர்வலத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று பினாங்கு மாநிலத்தின் இரண்டாவது துணை முதல்வரும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவருமான பி. இராமசாமி கடந்த வெள்ளியன்று கூறியிருந்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.