கோலாலம்பூர், நவ 15- நாட்டில் நேற்று புதிய நோய்த் தொற்று மையங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் நோய்த் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து ஐயாயிரத்தைக் கடந்து பதிவாகி வருகிறது.
நேற்று பதிவான 5,162 கோவிட்-19 சம்பவங்களில் 102 அல்லது 2 விழுக்காடு மூன்றாம்,நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டத்தைச் சேர்ந்தவையாகும் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
எஞ்சிய 98 விழுக்காடு அதாவது 5,058 சம்பவங்கள் லேசான அறிகுறிகள் அல்லது அறிகுறி இல்லாத ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்தவையாகும் என்று அவர் தெரிவித்தார்.
மொத்தம் 524 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் 265 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவி தேவைப்படுகிறது என்றார் அவர்.
நேற்று 5,019 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன் வழி நோயிலிருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 51 ஆயிரத்து 216 பேராக உயர்ந்துள்ளது என அவர் கூறினார்.







