கோலாலம்பூர், அக் 29- சரவா மாநிலத் தேர்தல் வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் தேதிக்குப் பின்னர் நடைபெற்றால் 18 வயதுக்கும் மேற்பட்ட இளையோருக்கு வாக்களிக்க அனுமதி வழங்கப்படும் என்று பிரதமர் துறை (நாடாளுமன்றம் மற்றும் சட்டவிவகாரங்கள்) அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் ஜூனைடி ஜாபர் கூறினார்.
கூச்சிங் உயர் நீதிமன்றம் இதற்கு முன்னர் பிறப்பித்த உத்தரவின்படி 18 வயதுக்கும் மேற்பட்டோருக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கும் திட்டத்தை அவசியம் அமல்படுத்தியாக வேண்டும் என்று அவர் சொன்னார்.
மக்களையில் இன்று சிப்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது ஹனிபா மைடின் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
சரவா மாநிலத் தேர்தல் வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னதாக நடைபெற்றால் 18 வயதினருக்கு வாக்குரிமை அளிக்கும் புதிய சட்டதை நாம் பயன்படுத்த வேண்டியதில்லை. எனினும் அடுத்தாண்டு ஜனவரிக்கு பின்னர் தேர்தல் நடந்தால் நீதிமன்ற உத்தரவுபடி இளம் வாக்காளர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படும் என்று வான் ஜூனைடி தெரிவித்தார்.
பதினெட்டு வயதினருக்கு வாக்களிக்கும் உரிமையை அளிக்கும் நடைமுறையை டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் அமல்படுத்தும்படி கூச்சிங் உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.








