ஷா ஆலம், செப் 6- பண்டார் மெவாவத்தி சிறப்புத் திட்டத்தின் கீழ்(ஆர்.கே.கே.) கோல சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள சில சுற்றுலா மையங்கள் தரம் உயர்த்தப்படும்.தரம் உயர்த்தப்படவிருக்கும் இடங்களில் புக்கிட் மெலாவத்தி, சுங்கை சிலாங்கூர், மின் மினி பூச்சிகள் சரணாலயம், தாமான் ஆலம், ஸ்கை மிரர் ஆகிய பகுதிகளிலும் அடங்கும் என்று கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகத் தலைவர் ரஹிலா ரஹ்மாட் கூறினார்.
மேற்கண்ட இடங்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மையங்களாக விளங்குகின்றன. ஆகவே, இப்பகுதிகளை தரம் உயர்த்தும் திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றார் அவர்.
எனினும், நகராண்மைக் கழகத்தின் நிதி ஆற்றலை பொறுத்தே இத்திட்டங்களுக்கான ஒதுக்கீடு குறித்து முடிவு செய்யப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பொதுமக்களை குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் தொடங்கப்பட்ட டத்தாரான் புக்கிட் மெலாவத்தியை தரம் உயர்த்தும் பணிகள் முற்றுப் பெற்று விட்டதாகவும் அவர் சொன்னார்.
கோல சிலாங்கூர் சுற்றுலா மையங்களின் இயற்கை அழகை சுற்றுலா பயணிகள் மத்தியில் பிரபலப் படுத்தும் நடவடிக்கையில் நகராண்மைக் கழகத்தின் சுற்றுலாப் பிரிவு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சமூக ஊடகங்கள் மூலம் இந்த ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கோவிட்-19 நோய்த் தாக்கம் தணிந்தப் பின்னர் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவர் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.
ECONOMY
கோல சிலாங்கூர் மாவட்டத்தில் சுற்றுலா மையங்கள் தரம் உயர்த்தப்படும்
6 செப்டெம்பர் 2021, 8:08 AM


