ECONOMY

மனநல ஆரோக்கியத் திட்டம் ஆக. 30 ஆம் தேதி தொடங்கப்படும்- டாக்டர் சித்தி மரியா

15 ஆகஸ்ட் 2021, 6:55 AM
மனநல ஆரோக்கியத் திட்டம் ஆக. 30 ஆம் தேதி தொடங்கப்படும்- டாக்டர் சித்தி மரியா

ஷா ஆலம், ஆக 15- சிலாங்கூர் மாநில மனநல ஆரோக்கியத் திட்டம் (சேஹாட்) இம்மாதம் 30 ஆம் தேதி தொடங்கப்படும் என்று சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட சவால்கள் காரணமாக மனோரீதியில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துவதற்கு ஏதுவாக இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக அவர் சொன்னார்.

நோய்த் தொற்று பரவல் காலத்தில் மனநலம் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை பொதுமக்கள் மத்தியில் உணர்த்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இத்திட்டத்திற்கு மாநில அரசு 5 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில அரசின் செலங்கா செயலி வாயிலாக சேஹாட் திட்டத்தின் உதவியை நாடலாம். அந்த செயலியில் உள்ள தொலைபேசி இணைப்பின் மூலம் மனநல நிபுணர்களுடன் நேரடியாக உரையாட முடியும் என்றார் அவர்.

இந்த சேஹாட் சிலாங்கூர் திட்டத்தின்  முன்னோட்ட நிகழ்வை இயங்கலை வாயிலாக தொடக்கி வைத்த போது அவர் இவ்வாறு கூறினார்.

மனநலம் தொடர்பான காணொளியை ஒளிபரப்புவதன் வாயிலாக மனநலப் பிரச்னையை கையாள்வதற்கான தொடக்கக் கட்ட வழிமுறையை பொதுமக்கள் அறிந்து கொள்வதற்குரிய வாயப்பு ஏற்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.