ECONOMY

கோவிட்-19 பாதிப்பினால் தீவிர சிகிச்சை பெறும் கர்ப்பிணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

12 ஆகஸ்ட் 2021, 7:15 AM
கோவிட்-19 பாதிப்பினால் தீவிர சிகிச்சை பெறும் கர்ப்பிணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

ஷா ஆலம், ஆக 12- கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பெறும் நிலைக்கு ஆளான கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை கடந்த ஒரு மாத காலத்தில் கிட்டத்தட்ட ஒரு மடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் 10 ஆம் தேதி 3 விழுக்காடாக இருந்த இந்த எண்ணிக்கை இம்மாதம் 10 ஆம் தேதி 5.3 விழுக்காடாக அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் 29 பேராக இருந்த மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட கோவிட்-19 கர்ப்பிணி நோயாளிகளின் எண்ணிக்கை நேற்று வரையிலான காலக்கட்டத்தில் 58 பேராக உயர்ந்துள்ளதாக அவர் சொன்னார்.

பொதுவாக 220 பேருக்கு ஒருவர் என்ற விகிதாசார அடிப்படையில் இருந்த நோய்த் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது மிக அதிகமாகும் என்றார் அவர்.

கோவிட்-19 நோயாளிகள் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். முதல் இரண்டு பிரிவினர் லேசான தாக்கத்தைக் கொண்டவர்கள். மூன்றாம் பிரிவினர் நிமோனியா எனப்படும் நுரையீரல் அழற்சியினால் பாதிக்கப்பட்டவர்கள், நான்காம் பிரிவினர் ஆக்சிஜன் உதவி தேவைப்படுவோர். ஐந்தாம் பிரிவினர் ஆபத்தான கட்டத்தில் உள்ளவர்கள் என்று நோர் ஹிஷாம் விளக்கினார்.

இவ்வாண்டு தொடங்கி கடந்த ஆகஸ்டு 9 ஆம் தேதி வரை கோவிட்-19 நோயினால் 70 கர்ப்பிணிகள் மரணமுற்றதாகவும் அவர் சொன்னார்.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் தொடங்கி இவ்வாண்டு ஜூன் மாதம் வரை மாதம் ஒன்றுக்கு சராசர  200 கர்ப்பிணிகள் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டு வந்தனர். எனினும் இந்த எண்ணிக்கை கடந்த மே மாதம் 850 ஆகவும் ஜூன் மாதம் 899 ஆகவும் உயர்வு கண்டது என்றார் அவர்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.