ECONOMY

நோயாளிகள் அதிகரிப்பைச் சமாளிக்க சி.ஏ.சி. மையங்கள் இனி தினமும் செயல்படும்

15 ஜூலை 2021, 12:01 PM
நோயாளிகள் அதிகரிப்பைச் சமாளிக்க சி.ஏ.சி. மையங்கள் இனி தினமும் செயல்படும்

ஷா ஆலம், ஜூலை 15- பரிசோதனைக்காக வரும் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு சிலாங்கூரிலுள்ள கோவிட்-19 மதிப்பீட்டு மையங்கள் (சி.ஏ.சி.) இனி தினசரி செயல்படும்.

இதற்கு முன்னர் இந்த மையங்கள் திங்கள் முதல் வெள்ளி வரை செயல்பட்டு வந்ததாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாமுடன் தாம் நேற்று நடத்திய சந்திப்பில் இதன் தொடர்பில் இணக்கம் காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

ஷா ஆலம், மெலாவத்தி அரங்கம் மற்றும் கிள்ளான், ஸ்ரீ அண்டலாஸ்  விளையாட்டங்கம் ஆகிய இடங்களில் உள்ள சி.ஏ.சி. மையங்களின்  நோயாளிகளின் எண்ணிக்கை அபரிமித அதிகரிப்பைக் கண்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஆஸ்ட்ரோ அவானி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.

வார இறுதியில் நோய்த் தொற்றுக்கு உள்ளாகும் நோயாளிகள் தங்கள் உடல் நிலையை மதிப்பீடு செய்ய திங்கள் கிழமை வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இவ்விவகாரத்தை  டான்ஸ்ரீ நோர் ஹிஷாமின் கவனத்திற்கு கொண்டுச் சென்றதை தொடர்ந்து அம்மையங்கள் தினமும் செயல்பட அவர் ஒப்புதல் அளித்துள்ளார் என்றார் அவர்.

மெலாவத்தி அரங்கம் மற்றும் ஸ்ரீ அண்டலாஸ் விளையாட்டரங்கம் தவிர்த்து  மாநிலத்தின் இதர இடங்களில் உள்ள சி.ஏ.சி. மையங்களுக்கு சோதனைக்கு செல்லும்படியும் பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.