ஷா ஆலம், ஜூலை 13- கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் திட்டங்களுக்காக பந்திங் சட்டமன்றத் தொகுதி கடந்தாண்டு தொடக்கம் முதல் இதுவரை ஒரு லட்சம் வெள்ளிக்கும் மேல் செலவிட்டுள்ளது.
இந்த நிதியைக் கொண்டு உணவுக் கூடைகள், மின் உபகரணங்கள், எழுது பொருள்கள், சக்கர நாற்காலிகள், மடிக்கும் வசதி கொண்ட படுக்கைகள் போன்றவை தேவைப்படுவோருக்கு வழங்கப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லாவ் வேங் சான் கூறினார்.
கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களை அடையாளம் காணும் முயற்சியில் எங்கள் தொகுதி சேவை மையம் இவ்வாண்டு தொடக்கம் முதல் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
தேவைப்படுவோருக்கு உதவுவதற்காக நாங்கள் ஒரு லட்சம் வெள்ளி வரையில் செலவிட்டுள்ளோம். இத்தகைய உதவிகள் மக்களின் சுமையை ஓரளவு குறைக்க உதவும் என நம்புகிறோம் என்றார் அவர்.
வசதி குறைந்தவர்கள் உணவுப் பற்றாக்குறைப் பிரச்னையை எதிர்நோக்குவதை தவிர்க்கவும் கணினி இல்லாத காரணத்தால் மாணவர்கள் வீட்டிலிருந்து கல்வி கற்பதற்கான வாய்ப்பை இழப்பதை தடுக்கவும் நாங்கள் தொடர்ந்து உதவிகளை நல்கி வருவோம் என அவர் கூறினார்.
உதவித் தேவைப்படுவோர் 012-638 4724/ 012-693 4724/ 012-695 4724 என்ற எண்களில் அல்லது lauwengsan@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தம்மைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


