ECONOMY

மெந்தாரி கோர்ட் பகுதியில் கோவிட்-19 பரிசோதனை முடிந்தது- தடுப்பூசி பணி தொடக்கம்

7 ஜூலை 2021, 1:50 PM
மெந்தாரி கோர்ட் பகுதியில் கோவிட்-19 பரிசோதனை முடிந்தது- தடுப்பூசி பணி தொடக்கம்

ஷா ஆலம், ஜூலை 7- கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.டி.) அமல்படுத்தப்பட்ட  பெட்டாலிங் ஜெயா, மெந்தாரி கோர்ட் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 9,007 பேருக்கு கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளும் பணி முடிவுக்கு வந்துள்ளது.

அப்பகுதியில் மீண்டும் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படாமலிருப்பதை உறுதி  செய்வதற்கும் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கும் ஏதுவாக தடுப்பூசி செலுத்தும் பணி அங்கு கொள்ளப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பி.கே.பி.டி. அமல்படுத்தப்பட்டுள்ள மெந்தாரி கோர்ட் பகுதியில் நேற்று நான் ஆய்வு மேற்கொண்டேன். இப்பகுதியில் பி.கே.பி.டி. அமலாக்கம் மிகவும் சவால்மிக்கதாக உள்ளது. காரணம் அங்கு வசிக்கும் சுமார் 17,000 பேருக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டியுள்ளது என்றார் அவர்.

கடந்த முதல் தேதி தொடங்கி இந்த குடியிருப்பு பகுதியில் தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்படுவதாக கூறிய அவர், பி.கே.பி.டி. அமல்படுத்தப்பட்ட பகுதியில் தடுப்பூசி செலுத்தும் இயக்கம் மேற்கொள்ளப்டுவது இதுவே முதன் முறையாகும் என்றார்.

இதே போன்ற அணுகுமுறை நடப்புச் சூழலைப் பொறுத்து வேறு இடங்களிலும் அமல்படுத்தப்படும் என தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

சுமார் 500 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த குடியிருப்பு பகுதியில் பி.கே.பி.டி. அமல் செய்யப்பட்டது. இப்பகுதியில் முதல் கட்டமாக நேற்று முன்தினம் 1,553 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.