புத்ரா ஜெயா, ஜூன் 18- ரவாங், புக்கிட் செந்தோசா மற்றும் டிங்கிலில் அந்நிய நாட்டினர் நடத்தி வந்ததாதக நம்பப்படும் மளிகைக் கடைகள் மீது குடிநுழைவுத் துறையினர் கடந்த 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் சோதனை நடத்தினர்.
இந்நடவடிக்கையின் போது அக்கடைகளில் வேலை செய்து வந்த 33 சட்டவிரோதக் குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டவர்களில் 18 வங்காளதேசி ஆடவர்கள், 7 மியன்மார் ஆடவர்கள், இரு பாகிஸ்தானியர்கள், ஒரு இந்திய பிரஜை மற்றும் மூன்று பெண்கள் உள்ளிட்ட ஆறு இந்தோனேசியர்களும் அடங்குவர் என்று குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ கைருள் ஜைமி டாவுட் கூறினார்.
கைதான அந்நியர்கள் அனைவரும் பயண அனுமதி அல்லது வேலை பெர்மிட்டை தவறாக பயன்படுததியது மற்றும் செல்லத்தக்க ஆவணைங்களை கொண்டிராதது தொடக்க கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் சொன்னார்.
இச்சோதனை நடவடிக்கையின் போது சிலர் தப்பியோட முயன்றதோடு மேலும் சிலர் மூர்த்தத்தனமானவும் நடந்து கொண்டனர். எனினும், அனைத்து அந்நிய நாட்டினரும் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டனர் என்றார் அவர்.
சோதனை மேற்கொள்ளப்பட்ட அனைத்து மளிகைக் கடைகளும் உள்நாட்டினர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததோடு வர்த்தக லைசென்சையும் கொண்டிருந்ததாக கூறிய அவர், அக்கடைகளை அந்நியக் குடியேறிகள் வாடகைக்கு எடுத்து நடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்








