புத்ராஜெயா, ஜூன் 6 - சிஜில் பெலஜாரன் மலேசியா எனும் (எஸ்.பி.எம்) 2021 தேர்வு அடுத்த ஆண்டு நடைபெறும் என்று மூத்த கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் ராட்ஸி ஜிடின் இன்று அறிவித்தார்.
எஸ்.பி.எம் 2021 க்கான வாய்வழி மற்றும் நடைமுறை அறிவியல் சோதனைகள் பிப்ரவரி 2022 இல் நடைபெறும், அதே நேரத்தில் மார்ச் 2022 இல் எழுத்து மூலமான தேர்வு நடைபெறும் என்றார்.
தற்போதைய சூழ்நிலையில் எஸ்பிஎம் 2021 ஆண்டுக்கான மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்களை கருத்தில் எடுத்துக்கொண்டதன் பின்னர் கல்வி அமைச்சு (கேபிஎம்) இந்த முடிவை எடுத்ததாக ராட்ஸி கூறினார்.
"எஸ்பிஎம் 2020 ஐ நிர்வகிப்பதில் கல்வி அமைச்சு பெற்ற அனுபவமே 2021 தேர்வின் காலம் அல்லது தேதியை 2022 க்கு நகர்த்த எடுத்த முடிவுக்கு காரணமாகிறது, மேலும் எஸ்பிஎம் 2021 தொடர்பான அனைத்து செயல்முறைகளும் எஸ்பிஎம் 2020 க்கு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதைப் போல சீராக இயங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் கூறினார் பள்ளிகளின் செயல்பாடு குறித்த ஒரு மெய்நிகர் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்








