கோலாலம்பூர், ஜூன் 4- பார்ட்டி கெஅடிலான் நேஷனல் கட்சியின் (பி.கே.ஆர்.) 2020ஆம் ஆண்டு தேசிய மாநாடு இன்று தொடங்கியது. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக இந்த மூன்று நாள் மாநாடு இயங்கலை வாயிலாக நடைபெறுகிறது.
இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இக்கட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இயங்கலை வாயிலாக அதன் மாநாடு நடத்தப்படுவது இதுவே முதன் முறையாகும்.
இந்த மாநாட்டின் முதல் அங்கமாக மகளிர் மாநாடு நடைபெறுகிறது. இதில் மகளிர் பிரிவின் ஆலோசகர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிசா இஸ்மாயில் அவர்களின் சிறப்புரையும் அதனைத் தொடர்ந்து மகளிர் பிரிவு தேசியத் தலைவி ஃபுஸியா சாலேவின் கொள்கையுரையும் இடம் பெறும்.
சனிக்கிழமையன்று கட்சியின் இளைஞர் பிரிவு மாநாடு தொடங்குகிறது. அப்பிரிவின் தலைவர் அக்மால் நஸ்ருல்லா முகமது நாசீர் கொள்கையுரையாற்றி மாநாட்டை தொடக்கி வைப்பார்.
தேசிய மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடிய ஐம்பது பேராளர்களை தேர்ந்தெடுப்பதற்காக இவ்விரு பிரிவுகளும் தேர்தலை நடத்தும்.
மாநாட்டின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கொள்கையுரை ஆற்றி மாநாட்டை தொடக்கி வைப்பார்.
ஸூம் செயலி வாயிலாக நடைபெறும் இந்த மாநாட்டில் 2,400 பேராளர்கள் தங்கள் வீட்டிலிருந்தவாறு இந்த மாநாட்டில் பங்கேற்பர்.
இந்த மாநாட்டை இயங்கலை வாயிலாகவும் பேராளர்களின் நேரடி பங்கேற்பின் வாயிலாகவும் ஷா ஆலமில் நடத்த முன்பு திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், இம்மாதம் முதல் தேதி தொடங்கி 14 நாட்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அத்திட்டம் கைவிடப்பட்டது.








