ஷா ஆலம், மே 30- “போலீஸ்காரர் பிணை பிடிக்கப்பட்டார்” எனும் தலைப்பில் ஹரியான் மெட்ரோ மலாய் நாளேடு நேற்று வெளியிட்ட செய்தியை ஷா ஆலம் மாவட்ட போலீசார் மறுத்துள்ளனர்.
ஷா ஆலமில் போலீஸ்காரர் ஒருவர் லாக்கப் தடுப்புக் காவல் கைதிகளால் பிணைபிடிக்கப்பட்டு தாக்கப்பட்டார். இதனால் அவருக்கு காயங்கள் ஏற்பட்டன என்று அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
அந்த போலீஸ்காரர் தனது இரு சகாக்களுடன் லாக்கப்பில் திடீர் சோதனை மேற்கொண்ட போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக அச்செய்தி மேலும் தெரிவித்தது.
மக்களுக்கு உண்மையான செய்திகளை வழங்குவதில் அனைத்து ஊடகங்களின் ஒத்துழைப்பும் தேவைப்படுவதாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பகாருடின் மாட் தாயிப் கூறினார்.
செய்திகள் தொடர்பில் விளக்கம் பெறுவதற்கு, தகவல்களை உறுதி செய்வதற்கு அல்லது மேல் விபரங்கள் பெறுவதற்கு ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைமையகத்துடன் (டி.எஸ்.பி. கார்த்திக் 012-9300162) தொடர்பு கொள்ளும்படி ஊடக நண்பர்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். இதன் மூலம் உண்மையான மற்றும் துல்லியமான தகவல்களை வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.








