கோலாலம்பூர், மே 15- பண்டார் பாரு செந்தூலில் உள்ள ஸ்ரீ பேராக் அடுக்குமாடி குடியிருப்பில் போலீஸ்காரர்கள் மீது பட்டாசுகளைக் கொளுத்தி வீசிய சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்றிரவு 10 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை அந்த அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 14 முதல் 16 வயது வரையிலான அந்த நான்கு மாணவர்களும் கைது செய்யப்பட்டதாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பே எங் லாய் கூறினார்.
பட்டாசுகளை கொளுத்தி போலீஸ்காரர்கள் மீது வீசியதை கைதான அந்த மாணவர்கள் விசாரணையின் போது ஒப்புக் கொண்டதாக அவர் சொன்னார்.
பட்டாசுகளை வெடித்து மகிழும் தங்கள் நோக்கத்திற்கு போலீஸ்காரர்கள் இடையூறாக இருந்த காரணத்தால் தாங்கள் அவ்வாறு நடந்த கொண்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டதாக ஏசிபி போ கூறினார்.
மேல் விசாரணைக்காக கைதான மாணவர்கள் வரும் 17ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பட்டாசுகளால் தீவிபத்து உள்பட பேராபத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் நிகழக்கூடும் என்பதால் இவ்விவகாரத்தில் போலீசார் உடனடி நடவடிகை எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமை இரவு நிகழந்த இச்சம்பவம் தொடர்பில் நான்கு ஆடவர்களை போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.








