ஷா ஆலம், ஏப் 30- பாலியல் தொல்லை தொடர்பான சட்ட மசோதாவை விரைந்து தாக்கல் செய்யும்படி மத்திய அரசை மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டுத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர டாக்டர் சித்தி மரியா மாமுட் கேட்டுக் கொண்டுள்ளார்.
பாலியல் பலாத்காரம் குறித்து ஆசிரியர் ஒருவர் கேலியாக பேசியதாக வெளிவந்த செய்தியின் அடிப்படை இச்சட்டத்தின் அவசியத்தை உணர்த்துவதாக உள்ளது என்று அவர் சொன்னார்.
பள்ளியில் நிகழ்ந்ததாக கூறப்படும் இச்சம்பவத்தை தாம் கடுமையாக கருதுவதாக கூறிய அவர், அந்த ஆசிரியர் பாலியல் கல்வி தொடர்பில் சரியான தகவல்களைத் தந்திருக்க வேண்டும் என்றார்.
ஆபாச கேலிகள் பொறுப்பற்ற சமுதாயத்தின் ஒரு அங்கமாக ஆகி விட்டது. இத்தகைய கேலி பேச்சுக்களை சாதாரண விஷயமாக கருதாமல் அதற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.
பள்ளியில் நடந்த அந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தை துணிச்சலுடன் அம்பலப்படுத்திய அந்த மாணவியை பாராட்டுகிறேன். அந்த மாணவிககு 2010ஆம் ஆண்டு தகவல் தருவோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன் என்றார் அவர்.
அண்மைய காலமாக அதிகரித்து வரும் பாலியல் தொல்லைகள் பாலியல் தொல்லை தொடர்பான சட்ட மசோதா விரைந்து தாக்கல் செய்யப்பட வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.








