கோலாலம்பூர், மார்ச் 25- இன்று மார்ச் 25ஆம் தேதியுடன் அரச மலேசிய போலீஸ் படை 214 ஆண்டு நிறைவை அடைகிறது. கம்யூனிஸ்டு பயங்கரவாதம், வெள்ளைக் காலர் எனப்படும் படித்தவர்கள் மத்தியிலான குற்றங்கள் மற்றும் ஆகக்கடைசியாக இணையக் குற்றங்கள் என பல வகையான சவால்களை இக்காலக்கட்டத்தில் போலீஸ் படை எதிர்நோக்கி வந்துள்ளது.
சவால் எத்தகையதாக இருந்த போதிலும் நல்லிணக்கம், பொது ஒழுங்கு, பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வதுதான் அத்துறையின் பிரதான இலக்காக இருந்துள்ளது.
இந்த 214 ஆண்டுகளில் 12 போலீஸ் படைத் தலைவர்கள் இந்த துறையை வழி நடத்தியுள்ளனர். தங்கள் பதவி காலத்தில் அவர்களில் ஒவ்வொருவரும் வேறு மாதிரியான சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.
முன்பு, குற்றங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது, நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது பொது ஒழுங்கை உறுதி செய்வது போன்றவை போலீஸ் துறையின் பிரதான பணியாக இருந்தது. ஆனால், இன்றைய இணைய அல்லது இலக்கவியல் உலகில் அத்துறை எதிர்நோக்கும் மிகப் பெரிய பிரச்னை காவல் துறை மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதுதான்.
இன்றைய நவீன உலகில் எந்தவொரு சம்பவமும் அது நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் உடனடியாக வைரல் ஆகி விடுகிறது. அதற்கேற்றாற்போல் போலீஸ் துறையும் தனது ஆற்றலை தொடர்ந்து மேம்படுத்தி வர வேண்டியுள்ளது.
எனது தலையாயப் பணியானது அரச மலேசிய போலீஸ் படை மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பது மற்றும் போலீஸ் படையின் தோற்றத்தை உயர்த்துவதுதான் என்கிறார் தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹமிட் பாடோர்.
இது ஒரு கடுமையான பணியாக இருந்தாலும் அதனை அடைய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. போலீஸ் படையின் தோற்றத்தை மாற்றுவதில் எனது முழு கவனத்தையும் செலுத்துவேன் என்று அவர் சொன்னார்.








