ஷா ஆலம், அக் 7- கோவிட்-19 நோய்த் தொற்றின் அதிகரிப்பு காரணமாக கிள்ளான் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட போதிலும் அங்குள்ள பள்ளிகள் வழக்கமாக செயல்படும் என்று சிலாங்கூர் மாநில கல்வி இலாகா அறிவித்துள்ளது.
மாறாக, நோய்த் தொற்று உள்ளதாக உறுதிபடுத்தப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட வகுப்புகள் மட்டுமே மூடப்படும் என்று மாநில கல்வி இயக்குநர் இஸ்மி இஸ்மாயில் கூறினார்.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நோய்த் தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இரு பள்ளிகளில் வகுப்புகளை மூடும்படி மாநில சுகாதாரத் துறை ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மாநில கல்வித் துறை இதுவரை ஏழு வகுப்புகளை மூடியுள்ளது. பண்டமாரான் இடைநிலைப் பள்ளியில் இரு வகுப்புகள் மற்றும் தாமான் ஸ்ரீ அண்டாலாஸ் பள்ளியில் ஐந்து வகுப்புகள் ஆகியவையே அவையாகும் என்றார் அவர்.
பண்டமாரான் இடைநிலைப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் கடந்த புதன்கிழமை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வேளையில் ஸ்ரீ அண்டாலாஸ் பள்ளியில் கடந்த சனிக்கிழமை தனிமைப்படுத்தப்பட்டனர் என்று அவர் மேலும் சொன்னார்.
பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில் பெற்றோர்கள் மத்தியில் காணப்படும் அச்ச உணர்வு குறித்து கருத்துரைத்த அவர், பள்ளிகளை மூடுவது மாநில சுகாதார இயக்குனரின் முடிவைப் பொறுத்த தாகும் என்றார் அவர்.
பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாக பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை என்ற பெற்றோரின் முடிவை மாநில கல்வி இலாகா மதிப்பதாக கூறிய இஸ்மி இஸ்மாயில், இதனால் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளதாக குறிப்பிட்டார்.








