ஷா ஆலம், செப் 17- சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவில் இரு புது முகங்கள் இணைந்ததைத் தொடர்ந்து ஆட்சிக் குழு பொறுப்புகளில் அடுத்த வாரம் சிறு மாற்றம் செய்யப்படும்.
ஆட்சிக்குழு மாற்றம் குறித்து சம்பந்தபட்ட தரப்பினருடன் இன்னும் விவாதிக்கப்பட்டு வருவதால் இவ்விவகாரம் தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
அரசு நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கு ஏதுவாக ஆட்சிக் குழுவை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள எனக்கு இரு வார அவகாசம் உள்ளது என்றார் அவர்.
இந்த மாற்றம் ஆட்சிக் குழுவில் காலியாக உள்ள இரு இடங்களை நிரப்புவது தவிர்த்து தன்வசம் உள்ள சில பொறுப்புகளை மட்டுமே உள்ளடக்கியதாக இருக்கும் என்று அவர் மேலும் சொன்னார்.
கிள்ளான், இஸ்தானா ஆலம் ஷா, பாலாய் ரோங்ஸ்ரீயில் இன்று நடைபெற்ற இரு ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினர்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக தாமதம் ஆன இந்த பதவியேற்பு சடங்கு இன்று சிறப்பாக நடைபெற்று முடிந்தது குறித்து அவர் மனநிறைவு தெரிவித்தார்








