கிள்ளான், செப் 17- தஞ்சோங் சிப்பாட் சட்டமன்ற உறுப்பினர் புர்ஹான் அமான் ஷா மற்றும் சுங்கை காண்டீஸ் சட்டமன்ற உறுப்பினர் முகமது ஜவாவி அகமது முக்னி ஆகிய இருவரும் சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.
இங்குள்ள இஸ்தானா ஆலம் ஷா, பாலாய் ரோங் ஸ்ரீயில் இன்று நடைபெற்ற நிகழ்வில் சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் முன்னிலையில் அவ்விருவரும் பதவி உறுதி மொழி மற்றும் இரகசிய காப்பு பிரமாணத்தை எடுத்துக் கொண்டனர்.
கூட்டரசு நிலையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை தொடர்ந்து பெர்சத்து கட்சியின் பிரதிநிதிகள் கடந்த மே மாதம் 5 ஆம் தேதி பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து செலாட் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ அப்துல் ரஷீத் அசாரி வகித்து வந்த கலாச்சாரம், சுற்றுலா, மலாய் பண்பாடு மற்றும் பாரம்பரிய துறைக்கான ஆட்சிக் குழு பதவி காலியானது.
வீடமைப்பு மற்றும் நகர்புற நல்வாழ்வு துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ஹனிசா முகமது தல்ஹாவின் அடிப்படை உறுப்பினர் அந்தஸ்தை கெஅடிலான் கட்சியின் கட்டொழுங்கு வாரியம் நீக்கியதால் அவரது பதவியும் காலியானது.
புதிதாக பதவியேற்றுள்ள இரு ஆட்சிக்குழு உறுப்பினர்களும் கெஅடிலான் கட்சியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.








