ஷா ஆலம், செப் 15- முன்னாள் தேசிய கால்பந்து விளையாட்டு வீரர் காலிட் ஜம்லுசின் தங்கக் காலணியை சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் வாங்கினார்.
அந்த தங்கக் காலணியை ஒப்படைக்கும் நிகழ்வு எளிய முறையில் கிள்ளானில் உள்ள இஸ்தானா ஆலம் ஷாவில் இன்று நடைபெற்றதாக சிலாங்கூர் அரண்மனை அலுவலகம் அறிக்கை ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது கூறியது.
அந்த தங்கக் காலணிக்கு இரு தரப்பும் ஒப்புக் கொண்ட விலை நிர்ணயிக்கப்பட்டதாக அந்த அறிக்கை தெரிவித்தது.
கடந்த 2002 ஆம் ஆண்டு காலிட் வென்ற அந்த தங்கக் காலணி ஆலம் ஷா அரண்மனை வளாகத்தில் உள்ள சிலாங்கூர் கால்பந்து காட்சியகத்தில் வைக்கப்படும்.
கடந்த 2005 மற்றும் 2006 ஆகிய இரு தவணைகளுக்கு சிலாங்கூரை பிரதிநிதித்து லீக் போட்டியில் காலிட் பங்கேற்றார்.
எனினும், பேராக் மாநிலத்தை பிரதிநிதித்து ஆடிய போதுதான் அவர் அந்த தங்கக் காலணியை வென்றார். லீக் போட்டியில் அவர் 17 கோல்கள் அடித்து சாதனை படைத்ததோடு பேராக் லீக் கிண்ணத்தை வெல்வதற்கும் உதவி புரிந்தார்.
மூன்று ஆண்டுகள் நிலையான வேலை இல்லாமல் இருந்தது மற்றும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஏற்படுத்திய பாதிப்பு ஆகிய காரணங்களால் தன்வசம் இருந்த தங்கக் காலணி மற்றும் இதர பொருள்களை காலிட் விற்க முன்வந்துள்ளதாக ஊடகங்கள் சில மாதங்களுக்கு முன்னர் செய்தி வெளியிட்டிருந்தன.








