கோல லங்காட், செப் 14- மலேசிய தினத்தை முன்னிட்டு இங்கு நடத்தப்பட்ட சிலாங்கூர் 600: நமது சமூகம்,நமது இல்லம் எனும் கருப்பொருளில் நடத்தப்பட்ட சைக்கிளோட்ட நிகழ்வை சிலாங்கூர் ராஜா மூடா துங்கு அமிர் ஷா முடித்து வைத்தார்.
ராஜா மூடா அவர்கள் சக சைக்கிளோட்ட வீரர்களான மரியானா முகமது, அடிலா ஜே சேம் மற்றும் எக்னஸ் லிம் ஆகியோருடன் 80 கிலோமீட்டர் தூரத்தை சைக்கிளில் கடந்து காலை 11.00 மணியளவில் கேரித் தீவிலுள்ள மா மெரி பாரம்பரிய கிராமத்தை வந்தடைந்தார்.
ராஜா மூடா அவர்களின் சிந்தையில் உருவான இந்த சைக்கிளோட்டப் போட்டியை சேய் எனப்படும் சிலாங்கூர் இளைஞர் சமூக அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
மாநிலத்திலுள்ள உதவி தேவைப்படுவோருக்கும் முன் களப் பணியாளர்களுக்கும் உதவும் நோக்கிலான இந்நிகழ்வு இம்மாதம் 8 ஆம் தேதி தொடங்கி இன்று முடிவடைந்தது.
இந்த மூன்று சைக்கிளோட்ட வீரர்களும் சிகிஞ்சான், பிரேசர் மலை, கோலாலம்பூர், சிப்பாங், கேரித் தீவு ஆகிய பகுதிகள் வழியாக 600 கிலோமீட்டர் தூரத்தை கடந்து பாரம்பரிய கிராமத்தை வந்தடைந்தனர்.








