ஷா ஆலம், செப் 8- சிலாங்கூர் மாநில அரசு பிரசித்தி பெற்ற நிறுவனங்களுடனான விவேக பங்காளித்துவத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.
இந்நடவடிக்கையின் வழி மக்களுக்கு மேலும் ஆக்ககரமானத் திட்டங்களை அமல் படுத்த முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் இ-பசார் மற்றும் ஷோப்பி நிறுவனத்துடனான திட்டம் வெற்றிகரமான ஒன்றாக விளங்குவதாகக் கூறிய அவர், இதன் மூலம் கிடைக்கும் வருமானம் பல கோடி வெள்ளியை எட்டியுள்ளது என்றார்.
இத்திட்டத்தில் நாம் செய்த முதலீடு பத்து லட்சம் வெள்ளிதான். ஆனால், அதன் வருமானம் மூன்று கோடி வெள்ளியை எட்டியுள்ளது. விவேக பங்காளித்துவம் ஆக்ககரமானதாக விளங்குவதை இது காட்டுகிறது என்றார் அவர்.
விவேக பங்காளித்துவம் இல்லாவிட்டால் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல முடியாது என்றும் ரோட்சியா கூறினார்.
2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மீதான கலந்துரையாடலில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
உரப்பாசன முறையில் மிளகு பயிரிடும் திட்டம் தொடர்பில் தாங்கள் வங்கிகளுடன் பேச்சு நடத்தி வருவதாக நகர், புறநகர் மற்றும் பாரம்பரிய கிராம மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
இத்திட்டத்திற்கு கடனுதவி வழங்க அக்ரோ வங்கி முன்வந்துள்ளது. சிறந்த விவேக பங்காளித்துவத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும் என்றார் அவர்.








