புத்ராஜெயா, ஏப்ரல் 21:
நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 5,482 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 57 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்று மூன்று மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரையிலான மரண எண்ணிக்கை 92-ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
இன்றைய நிலையில் 43 பேர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர். இவர்களில் 27 பேர்கள் சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இன்று 54 பேர்கள் சிகிச்சையிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இதைத் தொடர்ந்து இதுவரையில் கொவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,349 ஆக உயர்ந்திருக்கிறது. ஆசியான் வட்டாரத்தில் மிக அதிகமாக குணமடைந்தவர்களின் விகிதமாக அதாவது 61.1% இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நூர் ஹிஸாம் பெருமிதம் கொண்டார்.





