ஷா ஆலம், ஏப்.14-
சிலாங்கூரில் திடக் கழிவுப் பொருட்கள் துப்புரவு சேவை வழங்கி வரும் கேடிஇபி கழிவு நிர்வாக நிறுவனத்திற்கு அதன் தரமிக்க சுற்றுச் சூழல் பராமரிப்பு சேவைக்காக அனைத்துலக அமைப்பு நற்சான்றிதழ் வழங்கி சிறப்பித்தது.
ISO 9001:2015 மற்றும் 14001:2015 ஆகிய நற்சான்றிதழ்கள் ஏஜேஏ இகியூஎஸ் சான்றிதழ் நிறுவனத்தின் வாயிலாக கிள்ளான், அம்பாங், உலு சிலாங்கூர், சபாக் பெர்ணம், கோல சிலாங்கூர் உட்பட மொத்தம் 12 கிளைகளுக்கு வழங்கப்பட்டது என்று கேடிஇபி நிறுவனத்தின் பொது மற்றும் ஊடகத் தொடர்பு பிரிவுத் தலைவர் மாஹ்ஃபுஜா முகமது தார்மிடி கூறினார்.
இந்த அங்கீகாரச் சான்றிதழ்கள் கோல லங்காட், பெட்டாலிங் ஜெயா, சுபாங் ஜெயா, சிப்பாங் மற்றும் ஷா ஆலம் கிளைகளுக்கும் வழங்கப்பட்டன. கடந்த 5 ஆண்டுகளாக மாநிலத்தில் திடக் கழிவு பொருட்களை நிர்வகிப்பத்தில் நிறுவனம் பொறுப்புணர்ச்சியோடும் நேர்மையாகவும் அமல்படுத்திய நடவடிக்கைகளுக்கு கிடைத்த ஓர் அங்கீகாரமாக இந்த நற்சான்றிதழ் அமைந்துள்ளது என்றார் அவர்.
இந்த அங்கீகாரமானது ஆரோக்கியமான சுற்றுச் சூழலைப் பேணும் நிறுவனத்தின் நோக்கத்திற்கு கிடைத்த ஓர் ஊக்குவிப்பாகும் என்றும் அவர் சொன்னார்.


